சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

Back to Top
நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
11.034   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.034 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி   ( )
பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.

[1]
பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.

[2]
காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.

[3]
இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.

[4]
மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.

[5]
தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.

[6]
வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.

[7]
புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.

[8]
குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.

[9]
முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.

[10]
மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.

[11]
வலிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்,மட
மாதினை வாட்டுவதே.

[12]
வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.

[13]
அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.

[14]
நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.

[15]
நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.

[16]
நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.

[17]
கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

[18]
பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.

[19]
வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.

[20]
கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.

[21]
வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.

[22]
மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.

[23]
அரும்பின அன்பில்லை யர்ச்சனை
யில்லை யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன் பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.

[24]
அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.

[25]
சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.

[26]
திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.

[27]
எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.

[28]
கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.

[29]
எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.

[30]
ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.

[31]
கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.

[32]
கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.

[33]
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.

[34]
இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.

[35]
மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.

[36]
புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.

[37]
குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.

[38]
அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.

[39]
இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.

[40]
பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.

[41]
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.

[42]
பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.

[43]
மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.

[44]
சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.

[45]
மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.

[46]
குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.

[47]
இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.

[48]
வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.

[49]
புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.

[50]
கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.

[51]
மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.

[52]
பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.

[53]
கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.

[54]
குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.

[55]
புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.

[56]
கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.

[57]
உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.

[58]
நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.

[59]
கார்அங்(கு) அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்(கு) அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்(கு) அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.

[60]
அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.

[61]
தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.

[62]
நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.

[63]
மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.

[64]
அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.

[65]
தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.

[66]
களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.

[67]
தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.

[68]
நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.

[69]
மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.

[70]
ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.

[71]
விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.

[72]
எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.

[73]
அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.

[74]
வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல்
கள்மிண்டி வானத்து மின்னியவே.

[75]
மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.

[76]
நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.

[77]
தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.

[78]
உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.

[79]
பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

[80]
வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.

[81]
கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.

[82]
வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.

[83]
பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.

[84]
சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.

[85]
நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.

[86]
குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.

[87]
கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.

[88]
வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.

[89]
முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.

[90]
அடைத்தது மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்று
உடைத்தது பாணன்தன் யாழின்
ஒலியை யுரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக்கு
இறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்று
அரசு பணித்திடவே.

[91]
பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.

[92]
தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.

[93]
பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.

[94]
இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.

[95]
ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.

[96]
செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.

[97]
மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

[98]
சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.

[99]
பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.

[100]
பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.

[101]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool